காந்தி ஆசிரமம் அ. கிருஷ்ணன் தன் மனைவி மங்களம்அம்மாளுடன்

Wednesday 7 September 2011

என் பிறப்பும் குடும்பமும்

31 01 1984

திருநெல்வேலி ரயில் நிலையம் அன்று 'திருநெல்வேலி பாலம்' என்ற பெயருடன் விளங்கிற்று. பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அது
திருநெல்வேலி சந்திப்பு ஆயிற்று. அப்பகுதியில் திருநெல்வேலி நகராட்சிக்குட்பட்ட 'சன்னியாசிக் கிராமம்' என்ற தெருவில் இன்றைய 38ம் நம்பர் (அன்றைய 21ம் நம்பர்) வீட்டில்தான் நானும் எனக்குப் பெரியவர்களும் பிறந்தோம்.

என் பெற்றோர்கள் பெயர் - தகப்பனார் வக்கீல் குமாஸ்தா அய்யாவய்யர்; தாயார் பெயர் ராமலக்ஷ்மி அம்மாள். நான் என் பெற்றோர்களுக்கு எட்டாவது குழந்தை. கீலக வருஷம் ஆவணி மாதம் திருவோண நக்ஷத்திரத்தில் பிறந்த தாலும் எட்டாவது குழந்தையாதலாலும் எனக்கு கிருஷ்ணன் என்று பெயர். பெயருக்கேற்ற என் நிறம்: கருப்பு. நான் பிறந்த நாளுக்கு மறுநாள் என் தகப்பனாரைப் பெற்ற என் தாத்தா காரையாத்து சுப்பையர் காலமானார். நான் மாலை சந்தியா நேரத்தில் பிறந்தேன். என் SSLC புத்தகத்தில் என் பிறந்த தேதி 15 09 1908 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பஞ்சாங்கப்படி 07 09 1908 என்று என் 50வது வயதில் ஒரு ஜோஸ்யர் நூறாண்டுப் பஞ்சாங்கத்தைப் பார்த்துச் சொன்னார்.

திருநெல்வேலியையடுத்த 'அருவங்குளம்' என்ற நாரணம்மாள்புரத்தில் என் தகப்பனார் பிறந்தார். அவருக்கு ஒரு அண்ணனும் தம்பியும் தங்கையும் உண்டு. என் பாட்டனார் பெயர் 'காரையாத்து' சுப்பையர். அந்த நாளில் அந்த ஊரில் எல்லா வீடுகளும் மண் சுவர்களால் ஆனது போலும். என் பாட்டனார்தான் வீட்டுக்குச் சுண்ணாம்புக் காரையை உபயோகித்தார் போலும். எனவே அவர் 'காரையாத்து' சுப்பையர். என் பெரியப்பா 'காரையாத்து' செல்லப்பா. என் சித்தப்பா பெயர்: சங்கரன். என் அத்தை பெயர் கிட்டம்மா.

என் தகப்பனார் 1928 ஆகடு மாதம் காலமாகி விட்டார். அப்போது அவருக்கு வயது 56 அல்லது 58 என்று சொல்லிக் கொண்டார்கள். எனக்கு அப்போது வயது 20. என் தகப்பனாருடன் பிறந்தவர்கள் அவருக்குப் பின் பல்லாண்டுகள் வாழ்ந்து 70-75 வயதைத் தாண்டிய பின்தான் இயற்கை எய்தினர்.

எனக்கு மேலே ஏழு பேர்கள் பிறந்தார்கள் என்று சொன்னேன். முதலாவது பொன்னம்மாள், இரண்டாவது மீனாம்பாள்; மூன்றாவது ஹரிஹரசுப்பிர மணியன். நான்காவது ரங்கசாமி; ஐந்தாவது சங்கரன். ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டதாகச் சொன்னார்கள். அவள் பெயர் என்ன, எத்தனை காலம் வாழ்ந்தாள், யார் யாருக்கிடையே பிறந்தாள் என்பது எனக்குத் தெரியாது. நானும் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. நான் எட்டாவது குழந்தையென்று சொன்னேன். எனக்கு அடுத்த மூத்தவள் பெயர் லக்ஷ்மி. என் சகோதரர்கள், சகோதரிகள் எல்லோரும் பல்வேறு காலகட்டங்களில் இயற்கை எய்தி விட்டனர்.

நாங்கள் சாமவேதிகள். ஆகவே உபநயனம் செய்து வைக்கும் வரை அவ்வப்போது தலையை மொட்டை அடித்துக் கொள்வது வழக்கம், ஆகவே என் வீட்டில் பெரிய, சின்ன, நடு, கடை மொட்டைகள் என்றே எங்களை மற்ற உறவினர்களும் நண்பர்களும் அழைப்பது வழக்கம்.

(01 02 1984) என் தாயார் 1930 அக்டோபர் மாதம் 30ந் தேதியன்று விளாத்திகுளம் என்ற ஊரில் காலமானாள். எனக்கு அப்போது வயது 22. நான் திருச்செங்கோடு காந்தி ஆசிரம ஊழியனாக 1930 ஏப்ரல் 23ந் தேதி முதல் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தேன். என் தாயார் இயற்கை எய்திய பின் அவள் முகத்தை மறுநாள் சென்றுதான் பார்க்க முடிந்தது.

ஆனால் என் தகப்பனார் காலமானபோது பம்பாயில் வேலையிலிருந்த நான் நான்கு தினங்கள் முன்னதாகவே தந்தி கிடைத்து வந்து விட்டேன். என் மடியில் நான்கு தினங்கள் உயிருடன் இருந்தார். கடைசி நிமிடம் வரை நினை வுடன் பேசிக் கொண்டிருந்தார். என் தகப்பனார் நீரிழிவு நோயினால் காலில் புண் ஏற்பட்டு மூன்று மாதம் படுக்கையிலிருந்தார். என் சகோதரர் ரங்கசாமி தனக்குக் கிடைத்த CEYLON, RANGOON உத்தியோகங்களைப் புறக்கணித்து திருநெல்வேலி ஜில்லா‌ உத்தியோகத்தையேற்று, தகப்பனாருக்கு உதவி செய்து கொண்டிருந்தார்.

(02 02 1984) என் சகோதரர் கட்டி முடித்த வைப்பாறு ரோடு பாலம் அன்றைய ஆளுனரால் (ஆங்கிலேயர்) திறக்கப்படுவது மறுநாள். முதலில் முடித்த வேலையாதலால் அது சமயம் தான் அங்கு இருக்க என் சகோதரர் விரும்பினார். என் தகப்பனாரும் நல்ல நிலையில் தான் இருப்பதாக எண்ணி என் அண்ணாவுக்கு அனுமதி தந்தார். என் சகோதரர் Taxi ல் மாலை 4 மணிக்கு வாசுதேவ நல்லூருக்குப் புறப்பட்டுச் சென்றார். என் தகப்பனாருக்கு 6 மணிக்குக் கடும் ஜுரம் Delirium ஏற்பட்டு இரவு 8 30 மணிக்கு அவர் ஆவி பிரிந்தது. உடனே வேறொரு Taxi ல் சென்று என் அண்ணனை அழைத்து வந்தார்கள். தகப்பனாருக்கு மூன்று மாதங்கள் பக்கத்திலிருந்து பணிவிடை செய்து வந்த என் சகோதரர்க்கு, தகப்பனின் கடைசி மூச்சு நிற்கும்போது தான் பக்கத்தில் இருக்க முடியாது போனது 1973ல் அவர் இறக்கும் வரை மனதை விட்டு அகலவே இல்லை.

(03 02 1984) என் மூத்த சகோதரர் ஹரிஹரசுப்பிரமணியன் 1898-99ஆம் ஆண்டு பிறந்திருக்க வேண்டும். அவரை அடுத்தவர் ரங்கசாமி 1900ம் ஆண்டு பிறந்ததாக அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் என் மூத்த சகோதரர்     V Form படித்தபோது ஒரு ஆண்டு பரிட்சை சமயம் டைபாய்டு ஜுரத்தாலும் மறு ஆண்டு கைகால்களில் அழுகச் சிறங்கு ஏற்பட்டு தேர்வு எழுத முடியாது போனதாலும் அவருடைய தம்பி 1916ல் SSLC தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று சென்னை கிண்டி எஞ்ஜினியரிங் கல்லூரியில் Upper Subordinate வகுப்பில் சேர்ந்து படிக்க ஆரம்பித்து விட்டதாலும், என் மூத்த சகோதரர் மேலே படிக்க விரும்பவில்லை. அது சமயம் 1914ம் ஆண்டு ஆரம்பித்த முதலாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அதற்குப் பட்டாளத்திற்கு ஆள் சேர்ப்பு நடந்தது. பெற்றோர்களுக்குத் தெரியாமல் 18 வயது நிரம்பியதும் என் மூத்த சகோதரர் பட்டாளத்தில் சேரக் கையெழுத்திட்டு விட்டார். அதை வாபஸ் பெற என் தகப்பனார் எவ்வளவோ முயன்றும் முடிய வில்லை. ஆகவே அவர் (என் சகோதரர்) நெல்லையை விட்டு 1919 ஆகஸ்டு மாதம் சென்னை Army Campக்கு ஓரு வியாழக்கிழமை ரயிலேறினார். அடுத்த வாரம் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை General Hospitalல் இறந்து போனார். அவர் தம்பி ரங்கசாமி, ஆஸ்பத்திரிக்குச் சென்று மிகுந்த
சிரமங்களுக்கிடையே உடலைப்பெற்று, கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் தகனம் செய்தார். அன்று B & C Mills Strike ஆதலால், வண்டிகளே கிடைக்கவில்லை. புதுத்துணி வாங்கவும் கடைகள் திறக்கவில்லை. என் தகப்பனாரின் தாய் மாமா கணபதி அய்யர் நெல்லையிலிருந்து சென்னை சென்று சஞ்சயனம் முதலியன செய்து திரும்பினார். என் தகப்பனார் அன்று முதல் ஆறு மாதங்கள் பிரமை பிடித்தவராக இருந்தார். பின்னர் தன் நிலைக்கு வந்து இறக்கும் வரை ஒரு வைராக்கியத்துடன் வைதிக சிரத்தையுடன் வாழ்ந்து வந்தார். புத்திர சோகம் பொல்லாதது. என் தாயாரோ 11 ஆண்டுகள் அதே கவலையாக இருந்து மறைந்தார். அது பற்றிப் பின்னர் எழுதுவேன்.

(04 02 1984) T.S. வெங்கடாசலம் அய்யர் என் மூத்த சகோதரியின் கணவர். Pleadership pass செய்து (ப்ளீடராக) வக்கீலாக இருந்தார். அவர் தன் பெற்றோர்களுடன் எங்களுடனேயே கூட்டுக் குடும்பமாக இருந்தார். அவருடைய சகோதரிகள் ஐந்து பேர். அவ்வப்போது வந்து செல்வார்கள். என் அடுத்த சகோதரியின் கணவர் P.P. சுப்பையா அய்யர், திருநெல்வேலி ஜில்லா போர்டு இஞ்சினியர் ஆபீஸ் மேனேஜர். அவரும் என் வீட்டிற்கு எதிர் வீட்டிலேதான் இருந்தார். எனக்கு அடுத்த பெரியவளின் கணவர் G.P. ஹரிஹர அய்யர் என் சொந்த அத்தை பிள்ளைதான்; மேலும் என் பெரியப்பா சித்தப்பா குடும்பங்களென எங்கள் இல்லத்தில் தினமும் 30, 35 பேர்கள் சாப்பாடு நடக்கும். காலையில் நான்கு மணிக்கு அடுப்பு மூட்டினால் இரவு 11 மணிக்குத்தான் அடுப்பு அணைப்பார்கள். எப்போதும் வீடு ஜே ஜே என்று இருக்கும். அந்த நாட்களிலேயே என் தகப்பனார் வக்கீல் குமாஸ்தா தொழிலில் மாதம் ரூ 500 முதல் 700 வரை சம்பாதிப்பார். விலைவாசியும் மிக மலிவு. தரித்திர புத்திக்கு இடமேயில்லை. எப்போதும் பக்ஷணங்களும் விருந்துகளும் இருந்து கொண்டே இருக்கும். அந்நாளில் மனிதன் தன் அன்றாடத் தேவைகளை மிகக் குறைவாகவே வைத்திருந்தான். இன்று போல் Material Comforts என்று தன் அன்றாடத் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டு எப்படியாவது சம்பாதித்து இவற்றை அனுபவிக்க வேண்டுமென்ற பேராசை இல்லாமல் அமைதியான வாழ்க்கை நடத்தி வந்தான்.  அன்று ரூபாய்க்கு 192 தம்பிடி. இன்றோ ரூபாய்க்கு 100 பைசாதான்.

(05 02 1984) இன்று ஐந்தாம் தேதி. திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் 1928-39 களில் டாக்டராகப் பணியாற்றிப் பின்னர் திருச்செங்கோடு நகரத்தில் Private Practice நடத்தி வந்து ஓய்வு பெற்றுள்ள Dr. K. ரங்கநாதன் என்னைப் பார்க்க வந்ததால் டயரி எழுதவில்லை.

(06 02 1984) அந்நாட்களில் ஒரு ரூபாய்க்கு வாங்கிய பொருட்களை இந்நாட்களில் ரூ 5 முதல் 10 வரை கொடுத்தால்தான் வாங்க முடியும். அரசியல் பொருளாதார தவறான திட்டங்களால் விலைவாசிகள் விஷம் போல் ஏறி வருகின்றன.

நான் பள்ளிப் படிப்பில் அவ்வளவு சூடிகையானவன் இல்லை. ஆகவே 1919-20ல் III Formல் தேர்வு பெறவில்லை. 1920ல் மீண்டும் III Form நாமக்கல் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். 1925 மார்ச் மாதம் SSLC எழுதி னேன். தேறவில்லை. 1926லும் எழுதினேன். தேறவில்லை. Short hand Typewriting கற்று வந்தேன். 1927 July மாதம் என் அண்ணா ரங்கசாமியுடன் பம்பாய்க்கு ரயிலேறினேன். (நாமக்கல் வந்த வரலாறு மற்றும் என் அண்ணன் ரங்கசாமியின் பணி விவரங்கள்: 1920ம் வருடம் Upper Subordinateஇல் நல்ல மதிப் பெண்கள் பெற்றதால் என் சகோதரர் ரங்கசாமிக்கு உடனேயே நாமக்கல்லில் P.W.D.Station Officer ஆக உத்தியோகம் கிடைத்தது. அவருக்குத் திருமணமாகியிருந்தும் மன்னி பெரியவளாகவில்லையாதலால் குடித்தனம் வைக்கவில்லை. என் தாயார் வந்து வீட்டை நடத்தினார். அவருக்குத் துணையாக ஒரு ஆண்டு மட்டும் நான் நாமக்கல்லில் படித்தேன்.

Retrenchmentல் என் அண்ணனுக்கு வேலை போயிற்று. Mopla Rebellion Rehabilitation Schemeல் சில மாதங்களும், பின்னர் Southern Railwayல் சில மாதங்களும், தூத்துக்குடி Port Trustல் இரண்டரை ஆண்டுகளும் B B & C I RAILWAYல் Panjoo என்ற இடத்தில் கடலுக்குள் சுமார் இரண்டு மைல் இரும்புப் பாலம் அமைப்பதிலும் வேலை பார்த்துப் பின்னர் கல்கத்தா ரயில்வே Braith weight கம்பெனியில் வேலைகள் பார்த்து கடைசியாக 1927 கடைசி மாதங்களில் திருநெல்வேலி ஜில்லா போர்டு தலைவர் ஸ்ரீ குமாரஸ்வாமி ரெட்டியார் காலத்தில் Supervisor ஆகச் சேர்ந்து Provinicial Serviceல் A.E. Highways ஆகி 1956ல் ரிடையர் ஆனார். இரண்டு தடவைகள் அவர் மீது Corruption Charges ஏற்பட்டு இரண்டு தடவைகளிலும் he was completely exhonorated. அவர் ஓய்வு பெற்ற பின் தான் அவர் உத்தி யோகத்திலிருந்ததை விட அதிகம் சம்பாதிக்க முடிந்தது. வாய்ப்புக்கள் அவருக்கு அப்படி வந்தமைந்தன. தன் 73 வயது முடிந்த 74வது வயதில் காலமானார்.)

(07 02 1984) என் அடுத்த சகோதரர் சங்கரய்யர் Secondary Grade Training பாஸ் பண்ணி பல ஊர்களில் ஆரம்பப்பள்ளி உபாத்தியாயராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுத் தன் 56 வயதில் 1958 கார்த்திகை மாதம் கடுமையான நீரிழிவு வியாதியால் பீடிக்கப்பட்டு உதகை எமரால்டில் TNEB Chief Accountant ஆகப் பணியாற்றி வந்த தன் முதல் மகன் இடத்துக்குச் சென்ற இரண்டொரு தினங்களில் மாரடைப்பால் காலமானார்.
இப்படியாக என் 3 சகோதரர்களும் இயற்கை எய்தினர். என் சகோதரிகள் லக்ஷ்மி 1931 ஜனவரியிலும் மீனாம்பாள் 1952ம் வருடமும் சுமங்கலிகளாக காலமானார்கள். பெரிய சகோதரி 1955ம் வருடம் கைம்பெண்ணாக காலமானாள். இப்போதைக்கு என் குடும்ப வரலாறு இத்துடன் நிறுத்திக் கொண்டு மேலும் என் சுய புராணம் பாடுகின்றேன்.

2 comments:

  1. சார்!

    வணக்கம். நீண்ட காலங்களுக்கு பின்னர் இன்றுதான் தங்களுடைய படைப்புகளை படிக்க வாய்ப்பு கிடைத்தது .

    "அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியில் தலையில் கைவையித்த கதை", என்று ஒரு பழமொழி படித்து இருக்கின்றேன்.

    அதைப்போல கடைசியில் தாங்களும் நெல்லை சீமைக்கு சொந்தகாரர் என்பதனை இன்றுதான் உறுத்தல் செய்தேன்.

    தங்களுடைய படைப்பு மூலம் . மிகவும் சந்தோசம்.

    சுமார் ! ஐந்து வருடத்திற்கு முன்னர் தாங்கள் கூறி இருந்தீர்கள் தங்களுடைய உறவினர் ஒருவர் தான் வாசுதேவநல்லூர் மேல்பாலத்தை கட்டியது என்று .

    அப்பொழுது நான் நினைத்து கொண்டேன் வேலை நிமர்த்தம் ஆக தான் தங்களுடைய உறவினர் வாசுதேவநல்லூர் க்கு வந்து இருந்தார்கள் என்று ஆனால் இப்பொழுது தான் உண்மை நிலை புரிந்தது .

    மிகவும் சந்தோசம் ஐயா!

    ReplyDelete
  2. சார்!

    வணக்கம். நீண்ட காலங்களுக்கு பின்னர் இன்றுதான் தங்களுடைய படைப்புகளை படிக்க வாய்ப்பு கிடைத்தது .

    "அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியில் தலையில் கைவையித்த கதை", என்று ஒரு பழமொழி படித்து இருக்கின்றேன்.

    அதைப்போல கடைசியில் தாங்களும் நெல்லை சீமைக்கு சொந்தகாரர் என்பதனை இன்றுதான் உறுத்தல் செய்தேன்.

    தங்களுடைய படைப்பு மூலம் . மிகவும் சந்தோசம்.

    சுமார் ! ஐந்து வருடத்திற்கு முன்னர் தாங்கள் கூறி இருந்தீர்கள் தங்களுடைய உறவினர் ஒருவர் தான் வாசுதேவநல்லூர் மேல்பாலத்தை கட்டியது என்று .

    அப்பொழுது நான் நினைத்து கொண்டேன் வேலை நிமர்த்தம் ஆக தான் தங்களுடைய உறவினர் வாசுதேவநல்லூர் க்கு வந்து இருந்தார்கள் என்று ஆனால் இப்பொழுது தான் உண்மை நிலை புரிந்தது .

    மிகவும் சந்தோசம் ஐயா!

    ReplyDelete